Wednesday, October 5, 2016

செருப்பு

'எங்கேயடி விட்டு வந்தாய்
ஏமாளிச் சிறு பெண்ணே'
என அதட்டும் தாயின் முகம்,
'போன வாரந்தான் வாங்கிய
விலையுயர்ந்த புதுச்செருப்பு'
என சலிப்பில் தந்தை குரல்,
பதிலேதும் தெரியாமல்
பொம்மை போட்ட செருப்பைத் தேடிப் 
பரிதவிக்கும் பிஞ்சு முகம் -
இத்தனையும் மனதில் காட்டி
இணை பிரிந்த இதயம் போல
துணையைப் பிரிந்து தனியாக
தார்ச்சாலையில் கிடக்கிறது
சின்னஞ்சிறிய ஒரு செருப்பு!

No comments:

Post a Comment